search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலையில் போலி டாக்டர் தம்பதி கைது"

    திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் போலி டாக்டர் தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக புகார் வந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் அங்கு திடீர் நேரடி ஆய்வு நடத்தினர்.

    அப்போது பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவிதா (வயது 41), அவரது கணவர் பிரபு (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஐ.பி.சி. 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


    போலி பெண் டாக்டர் கவிதா 10-ம் வகுப்பும், கணவர் பிரபு பிளஸ்-2 படித்துள்ளனர். தன்னுடைய மெடிக்கல் ஷாப்பில் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக்காக ஏற்கனவே 2 முறை பிரபு கைது செய்யப்பட்டவர். கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அதில், நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 பெண்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளும் சிக்கி இருக்கிறது. ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரம் பெண் சிசுக்கள் வரை கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    பெண் குழந்தைகள் வேணடாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

    கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இங்கு கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கருக்கலைப் பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டு பேன்ஸி ஸ்டோருக்கு சீல் வைத்தனர்.


    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பிற்கு தொடர்பு கொண்டதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10-ம் வகுப்பு படித்த கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நடத்திய ஆய்வில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோர் போல் இருந்தது. உட்பகுதியில் கிளினீக், மருந்து பொருட்கள் மற்றும் கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தது.

    செல்போன் எண்ணை வைத்து தான் இந்த இடத்தை கண்டறியப்பட்டது. கிரிவலப்பதையில் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சந்தேகப்படாத வகையில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோரும் வைத்திருந்தனர்.

    இப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது நாள்தோறும் 2-க்கும் மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து சென்றது தெரியவந்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக கவிதா மற்றும் அவரது கணவர் பிரபு கருக்கலைப்பை தொழிலாக நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம்.

    முதற்கட்டமாக கிளினீக் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீட்டில் ஆய்வு செய்யப்படும்.

    தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கருக்கலைப்புக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் இந்த செயலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்பு ரூ.15 ஆயிரம் வசூலித்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்செல்வன் வீட்டில் ரகசிய அறையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டருக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தற் போது மீண்டும் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.
    ×